Thursday 5 March 2015

ஜீவகாருண்யம்

வாசகர்களுக்கு,

எருமை பசு ஆடு பன்றி கழுதை குதிரை ஒட்டகம் லாமா போன்ற கால்நடைகள் நமது துணைவர்கள். பால் இறைச்சி சாணம் தோல் கம்பளி போன்று பல வழிகளில் அவற்றால் நாம் பயனடைகிறோம்.

நமது உணவு உற்பத்தியில் சாணம் மற்றும் அது சார்ந்த எருவின் பங்கு முதன்மையானது. இன்று விவசாயத்தை ரசாயன உரங்களற்ற இயற்கையான ஒன்றாக மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எருவின் பயனை முடிந்த வரை அதிகரிப்பது நலம். இதற்கு கால்நடைகள் நீண்ட காலத்திற்கு காப்பாற்றப்படுவது நல்லது. எருமை பசு பன்றி போன்ற கால்நடைகள் நமது உணவுக் கழிவுகளை (கஞ்சி, காய்கணி கழிவுகள் முதலியவை) உண்டு நமக்கு சாணமாக தரக்கூடியவை.

நகரங்களின் உணவுக் கழிவுகள் வீதியின் கால்வாய்களில் தான் கொட்டப்படுகிறது. (இதன் தீங்குகளைப் பற்றி தனியாக விளக்க வேண்டும்.) பதிலாக ஒவ்வொரு வீதியிலும், பகுதியிலும் கால்நடை வளர்ப்பு மையங்கள் நடத்தப்படவேண்டும். இறைச்சி உணவுக்கழிவுகள் பன்றிகளுக்கும் மற்றவை எருமை பசு போன்றவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் காலி இடங்கள் இதற்காகவும் கால்நடைகளுக்கு தீவனம் வளர்க்கவும் பயன்படுத்தப்படவேண்டும்.

இந்த மையங்களில் வளர்க்கப்படும் ஆண் பெண் கால்நடைகள் அதன் கடைசி மூச்சு வரை காப்பாற்ற படுவது நலம். (தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக சில மிகவும் வயதான விலங்குகளை அதன் கடைசி மூச்சிற்கு முன்னதாகக்கூட கசாப்பு செய்து விடலாம்) இதனால் நமக்கு சாணம் என்ற உயரிய எருவின் தேவை தொடர்ந்து பூர்த்தி செய்யப்படும். இந்த சாணம் வயலில் பயன்படுவதற்கு முன்பு எரிவாயு தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த எரிவாயு அப்பகுதியின் பொது உணவகத்தை நடத்த உதவும்.

இந்த மையங்களில் இறந்த மாடுகளின் இறைச்சியை விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஜீவகாருண்யத்தினால் இறைச்சியை உண்ணாமல் இருப்பவர்கள் இந்த இறைச்சியை ஏற்றுக் கொள்வது நலம். மற்றவர்களும் இந்த ஜீவகாருண்யத்தை ஏற்றுக்கொள்வதை இது ஏதுவாக்கும். இதன் மூலம் இந்த விலங்குகளின் இனிய வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த முடியும். அதுவும் இதற்கென்று எந்த சட்டங்களும் தேவையில்லாமலேயே.

நாம் இயற்கையில் அதாவது புதர் மறைவில் மலம் கழித்ததை நிறுத்தியதிலிருந்து நமது கழிவுகளும் மறுசுழற்சியில்லாமல் நமது வீடுகளுக்கடியில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இது கால்நடைகளுக்கு பச்சைத் தீவனம் வளர்க்க பயன்படுத்தவேண்டும். இதன் மூலம் கால்நடைகளின் தீவனத்தை உறுதிப்படுத்த முடியும்.

இது போன்ற பாரிய மாற்றங்கள் பொதுநல பொதுவுடமை சமூகத்தில் தான் சாத்தியம் என்பதும் புரிந்து கொள்வது கடினமானதல்ல.

இந்த பொது மையங்களுக்கும் கூடுதலாக எருமை பசு பன்றிகள் அவற்றிற்கு நீண்ட ஆயுட்காலம் அளிக்கும் விதத்தில் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். மற்ற விலங்குகள் அதாவது ஆடுகள் கோழிகள் போன்றவை பொதுவிலோ, தனியாகவோ முடிந்தவரை இயற்கையாக வளர்க்கப்பட்டு கிட்டத்தட்ட இப்போது உள்ளதைப் போலவே பயன்படுத்தப்படலாம்.

மேலேயுள்ள ஒன்றுமே புதியதில்லை. எல்லாமே இயற்கையில் முன்னர் இருந்த சமநிலைதான். சிந்திப்போம். செயல்படுவோம். நம்மையும் நம் துணைவர்களையும் காத்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment